Fri04262024

Last updateSun, 19 Apr 2020 8am

தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் என்கிறார் ஹேர்மன் குமார

தன்னை இனந்தெரியாத நபர்கள் சிலர் இரகசியமாக பின் தொடர்வதாகவும், தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டடால் அதற்கு அரசாங்கமும் கத்தோலிக்க சிருச்சபையும் பொறுப்பு கூற வேண்டும் என்று தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவரும் உலக மீனவ மக்கள் சம்மேளனத்தின் இலங்கைக்கான விசேட பிரதிநிதியுமான ஹேர்மன் குமார தெரிவித்தார் .

 


எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நீர்கொழும்பு மற்றும் சிலாபத்தை சேர்ந்த மீனவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாகவே, தன்னை இனந்தெரியாத நபர்கள் சிலர் இரகசியமாக பின் தொடர்வதாகவும், தன்னை கொலை செய்வதற்கோ கடத்துவதற்கோ அல்லது வேறேதும் ஆபத்தை ஏற்படுத்துவதற்கோ சிலர் முயற்சி செய்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை நீர்கொழும்பில் அமைந்துள்ள தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற போதே, அவர் மேற் சொன்னவாறு குறிப்பிட்டார்,

அவர் தொடர்ந்து அங்கு தெரிவிக்கையில்,

வடக்கு உட்பட நாட்டிலுள்ள மீனவர்களின் உரிமைகளுக்காக நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். அவர்களுக்கு நாங்கள் பல்வேறு வகைகளில் உதவி புரிந்து வருகிறோம்.

அண்மையில் மீனவர்கள் மேற்கொண்ட போராட்டத்திற்கு நாங்கள் தலைமை தாங்கவில்லை. அது மீனவர்கள் சுயமாக மேற்கொண்ட போராட்டமாகும் . மீன்பிடிதுறை அமைச்சர் ராஜித சேனாரத்ன அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது அருண ரொசாந்தவும், ஹேர்மன் குமாரவும் மீனவர்களின் ஆர்ப்பாட்டங்களின் பின்னால் இருந்து செயற்பட்டதாகவும், அவர்களுக்கு வெளிநாடுகளிலிருந்து டொலர்கள் நேரடியாக கிடைப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

அதுபோல் , நீரகொழும்பு - பெரியமுல்லை பங்குத் தந்தை நோனிஸ் அவர்களும் மீனவர்களின் போராட்டத்திற்கு நாங்கள் இருவருமே காரணம் என்று குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.

இந்நிலையில், கடந்த மாதம் முதல் நான் இனந் தெரியாத நபர்களால் பின் தொடரப்படுகிறேன். என்னை கொலை செய்வதற்கோ கடத்துவதற்கோ அல்லது வேறேதும் ஆபத்தை ஏற்படுத்துவதற்கோ சிலர் முயற்சி செய்கின்றனர் . பொது மக்களுக்கு அரசாங்கம் பாதுகாப்பு வழங்க வேண்டும் . எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு அரசாங்கமும் , கத்தோலிக்க திருச்சபையும் பொறுப்பு கூற வேண்டும் என்றார்.

அகில இலங்கை ஐக்கிய மீனவ தொழிற்சங்கத்தின் முக்கியஸ்தர் அருண பிரசாந்த , சுதந்திரத்திற்கான அரங்கம் அமைப்பின் முக்கியஸ்தர் பிரிட்டோ பெர்னாந்து , தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் நிருவாக செயலாளர் கீதா லக்மினி , அருட்தந்தை சரத் இத்தமல்கொட , சட்டத்தரணி வின்சன்ட் புலத்சிங்கள , சிலாபத்தை சேர்ந்த மீனவ சங்கத்தின் தலைவர் லோயல் பீரிஸ் ஆகியோர் இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது விளக்கமளித்தனர்.

http://www.ilankainet.com/2012/03/blog-post_3083.html