ஜனாதிபதி முறையைக் கொண்டு வந்தது எது?
- Details
- Category: இரயாகரன்
-
20 Nov 2014
- Hits: 3174
இன்று அரசும் - மாறி மாறி ஆட்சிக்கு வரும் ஆட்சியாளர்களும் ஜனாதிபதி முறை எப்படி தோன்றியது பற்றி, சுயநலத்துடன் கூடிய பலவிதமான சந்தர்ப்பவாதக் கருத்துகளை மக்கள் மத்தியில் கூறி வருகின்றனர். யுத்தம் - புலிகள் - தனிமனித அதிகாரத் தன்மை என்று, இதற்குள்ளாகவே இதைக் காட்டிவிட முனைகின்றனர்.
இந்த வகையில் ஜனாதிபதி ஆட்சி முறையை கொண்டு வர புலிகளும், யுத்தமும் தான் காரணம் என்று அரசு இன்று முன்வைக்கின்றது. யுத்தத்தை நடத்தவும், வெல்லவும் தனிமனித அதிகாரம் கொண்ட ஆட்சி முறை அவசியமாக இருந்தது என்கின்றனர்.
எதிர்க்கட்சிகளோ "ஜனநயாகத்தை" மறுக்கும் தனிமனித அதிகார வெறியும், குடும்ப ஆட்சி முறையும் தான் காரணம் என்கின்றனர்.
இப்படி ஜனாதிபதி ஆட்சி முறையைக் கொண்டு வந்த காரணத்தை கூறுவதன் மூலம், எதற்காக கொண்டு வரப்பட்டதோ அதனை பாதுகாக்க முனைகின்றனர்.
மோசடியான இந்த தர்க்கமும் வாதமும் ஒருபுறம் இருக்க, அரசும் ஆட்சிக்கு மாறிமாறி வரும் ஆட்சியாளர்களும் எடுத்துக் காட்டும் புலிகளையும், யுத்தத்தையும் தோற்றுவித்தது எது?
அரசு தான். யுத்தம் தன்னியல்பாக வெற்றிடத்தில் இருந்து தோன்றவில்லை. அரசு தமிழ் மொழி பேசுகின்ற மக்களையும், பௌத்தமல்லாத பிற மதங்களையும் பிரி;த்தள்வதற்காக இரண்டம் நிலைக்கு தாழ்த்தி ஒடுக்கியதன் மூலம் தோன்றியது தான் யுத்தம். இதற்கு வெளியில் யுத்தம் தோன்றவில்லை.
மொழியையும் மதத்தையும் பிரித்தாளும் கொள்கையை அரசு எதற்காகக் கையாண்டது? சிங்கள மொழி மீதான மொழி வெறியோ, பௌத்த அடிப்படைவாத கொள்கையோ அல்ல.
மாறாக அரசு மக்களுக்கு எதிராக முன்னெடுத்த நவதாரளப் பொருளாதாரக் கொள்கையை மூடிமறைக்கவே, மக்களைப் பிரித்தாண்டது. இதேபோல் நவதாரள பொருளாதாரக் கொள்கைக்கு முன்பான அதன் மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கை இதற்கு முந்தைய காரணம். அரசின் இந்த பிரித்தாளும் கொள்கையே, அரசு கூறுகின்ற யுத்தத்துக்கு இட்டுச் சென்றது. யுத்தம் ஜனாதிபதி முறையைக் கொண்டு வரவில்லை. அதே போல் பிரித்தாளும் தந்திரமும் ஜனாதிபதி முறையைக் கொண்டு வரவில்லை.
1970 களில் சர்வதேச ரீதியாக அமுலுக்கு வந்த நவதாரள ஏகாதிபத்திய திறந்த பொருளாதாரக் கொள்கை, ஜே.ஆரின் ஆட்சி காலத்தில் அமுலுக்கு கொண்ட வரப்பட்டது. இந்த நவதாரள திறந்த பொருளாரக் கொள்கையை அமுலுக்கு கொண்டு வர இருந்த தடைகளை நீக்கவே, ஜனாதிபதி முறை கொண்டு வரப்பட்டது.
1970 களில் ஜே.ஆருக்கு முந்தைய அரசு மேல் இருந்து கொண்டு வந்த தேசிய பொருளாதாரக் கொள்கை, விவசாயம் மற்றும் சிறு கைத்தொழிலில் புதிய மத்திய தரவர்க்க எழுச்சியை உருவாக்கியது. அன்னிய பொருள்களின் சந்தைக்கும், அதன் உற்பத்திக்கும் எதிரானதாக வளர்ச்சியுற்றது.
இந்த தேசிய பொருளாரதாரத்தை தடுத்து நிறுத்தி, அன்னிய மூலதனத்துக்கும், அதன் உற்பத்திக்கும் நாட்டை திறந்து விடுவதற்காக கொண்டுவரப்பட்டதே ஜனாதிபதி ஆட்சி முறை. இதன் மூலம்
1. தேசிய உற்பத்தி சார்ந்த புதிய மத்தியதர வர்க்கங்களை ஒடுக்கி, அன்னிய பொருட்களை சந்தையில் குவிக்கவும்
2. இந்த உற்பத்தி முறை சார்ந்து ஆளும் வர்க்கத்தின் உள்ளான முரண்பாடுகளையும், பேரங்களையும், சீர்திருத்தங்களையும் தடுத்து நிறுத்தி நவதாரமயத்தை தடையின்றி கொண்டு வரவுமே
ஜனாதிபதி முறை கொண்டு வரப்பட்டது. தேசியம் சாராத புதிய ஆளும் வர்க்கத்தின் "சுதந்திரமான" வளர்ச்சிக்கு அவசியமாக இருந்ததே தனிமனித சர்வாதிகாரத்தை அடிப்படையாகக் கொண்ட ஜனாதிபதி முறை.
இது ஆளும் வர்க்கத்தின் முரண்பட்ட பிரிவுகளையும், இது சார்ந்த கட்சிக்குள்ளும் மற்றைய கட்சிக்குள்ளும் நிலவிய முரண்பாடுகளையும், அது சார்ந்த பாராளுமன்ற பேரங்களையும் கட்டுப்படுத்த இந்த ஆட்சி முறை நவதாரமயத்துக்கு அவசியமாக இருந்தது. இன்று நவதாரளவாதக் கட்சிகள் கூறுவது போல்
1. இன ரீதியாக மக்களை பிரிதாண்டதால் உருவான யுத்தமும் அதனுடன் வளர்ந்த புலியும் ஜனாதிபதி முறையைக் கொண்டு வரவில்லை.
2. தனிமனித அதிகாரவெறி ஜனாதிபதி முறையைக் கொண்டுவரவில்லை.
இந்த பின்புலத்தில் தனிமனித அதிகார தன்மைகள் இயங்கினவே ஒழிய, தனிமனித அதிகார இயல்புகள் ஜனாதிபதி முறையைக் கொண்டு வரவில்லை. ஜனாதிபதி முறையை நியாயப்படுத்த யுத்தம் பயன்படுகின்றதே ஓழிய, யுத்தம் ஜனாதிபதி முறையைக் கொண்டு வரவில்லை.
1970 களில் சர்வதேச ரீதியாக அமுலுக்கு வந்த நவதாரள கொள்கையை முன்னெடுக்க ஜனாதிபதி முறை கொண்டுவரப்பட்டது. இனி அந்த முறை தேலையில்லை, பழைய பாரளுமன்ற வழிகளில் தொடராலம் என்பதே ஜனாதிபதி முறையை எதிர்க்கின்றவர்களின் நிலைப்பாடு. ஜனாதிபதி முறை தொடர்ந்தால் நவதாரள மயத்தை பாதுகாப்பதற்கு பதில், அதை அழித்துவிடும் மக்கள் போராட்டமாக மாறுவதைத் தடுக்க, பாராளுமன்ற சீர்திருத்தம் அவசியம் என்பதே ஏகாதிபத்தியங்கள் முதல் தேர்தல் "ஜனநாயகவாதிகளின்" இன்றைய கொள்கையாகும். ஜனாதிபதியை முறை மாற்றக் கோரும் பொது வேட்பாளர், இந்த அடிப்படையில் முன்னிறுத்தப்படுகின்றார்.