Sat04272024

Last updateSun, 19 Apr 2020 8am

புலிக் குழுக்கள் நவம்பர் 27 ந் திகதி மாவீரர் நாளுக்கான தயார் படுத்தலில் ஈடுபட்டுள்ளனர். (பகுதி-4)

ஒப்பீட்டளவில் மிகவும் உயர்ரகத் தாக்குதலான இவ்வகைத் தாக்குதல் பரிதிமீது மேற்கொள்ளப்படும் வரைக்கும் மற்றொரு எல்.ரீ.ரீ.ஈயின் சிரேட்ட தலைவராகிய தனம் என்பவர்மீது மட்டுமே லண்டனில் வைத்து நடத்தப்பட்டிருக்கிறது.யாழ்ப்பாணம் பாஷையூரைச் சொந்த இடமாகக் கொண்ட றூபேர்ட் சூசைப்பிள்ளை அல்லது தனம் என்கிற எல்.ரீ.ரீ.ஈயின் சிரேட்ட தலைவர் பிரித்தானியாவில்  எல்.ரீ.ரீ.ஈயின் நிதி அமைப்புக்கு பொறுப்பாகவிருந்தார். இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் வினாயகம் பிரிவினரின் சில அங்கத்தவர்களால் அவர் தாக்குதலுக்கு உள்ளானார். வினாயகம் பிரிவினரின் லண்டன் தலைவராகிய சங்கீதன் என்பவரே இந்த தாக்குதலின் பின்னணியில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

 

லண்டனில் தனத்தின்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலானது பிரித்தானியாவில் செயற்பட்டு வந்த நெடியவன் பிரிவு செயற்பாட்டாளர்களிடம் அதிர்ச்சி அலைகளைப் பரப்பியது.சிலர் செயற்பாடுகளை நிறுத்தியதுடன் மற்றும் அநேகர் பக்கங்கள் மாறத் தொடங்கினர். இவர்கள் மத்தியில் தலைமை நிலையில் உள்ளவர், மிகவும் மதிப்பான சுயவிபரக் குறிப்புகளைக் கொண்டவரும், ஸ்ரீலங்காவில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு (ரி.என்.ஏ) பாராளுமன்ற அங்கத்தவர் ஒருவரின் நெருங்கிய உறவினருமாகிய ஸ்கந்தா என்பவராவார்.ஸ்கந்தா இப்போது வினாயகம் பிரிவினர் சார்பாக நவம்பர் 27 ந்திகதி மாவீரர் நாளினை லண்டனில் வெகு சிறப்பாகக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளில் மூழ்கியுள்ளார்.

பரிதிமீது நடத்தப்பட்ட தாக்குதலும் பிரான்சிலும் பிரித்தானியாவைப் போன்ற விளைவையே ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப் படுகிறது.சிலர் தங்கள் செயற்பாடுகளை நிறுத்தும் அதேவேளை மற்றவர்கள் பக்கம் மாறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நெடியவன் பிரிவின் இதர முன்னிரை அங்கத்தவர்களுக்கு எதிராக பல்வேறு நாடுகளில் மேலும் பல உடல்ரீதியான தாக்குதல்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.

இதில் நினைவில் கொள்ளவேண்டியது என்னவென்றால் பயங்கரவாதப் பிரயோகம் மற்றும் அச்சுறுத்தல்கள் போன்ற நடைமுறைகள் கடந்த காலங்களில் எல்.ரீ.ரீ.ஈ யினரால் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளவை. எல்.ரீ.ரீ.ஈ சக்திகளைப் பொறுத்தவரை வன்முறைகள் மற்றும் அச்சுறுத்தல்களைப் பிரயோகிப்பது உண்மையான அல்லது உணரப்பட்ட எதிரிகள் விடயத்தில் மட்டுமே. ஆனால் இப்பொழுது அந்தப் பாத்திரங்கள் தலைகீழாக மாறி சொந்த இனமே இரையாக மாற்றம் பெற்றுள்ளது.முதல் முறையாக எல்.ரீ.ரீ.ஈ ஆர்வலர்கள் தங்கள் உடல் ரீதியான பாதுகாப்பைக் குறித்து கவலையடையத் தொடங்கியுள்ளார்கள்.எதிரி வெளியிலிருந்து வரவில்லை ஆனால் அவர்களது சொந்தப் பகுதியிலிருந்தே தோன்றியுள்ளார்கள் என்கிற உண்மை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல காயங்களுடன் அவமானத்தையும் கூடச் சேர்த்து வழங்கியுள்ளன.

வன்முறையால் பாதிப்படைந்தவர் தானாக முன்வந்து காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்யாததால் இது மிகவும் ஆழமான உள்ளகப் பிரச்சினையாக கருதப்படுகிறது.முறைப்பாடுகள் செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டால் எல்.ரீ.ரீ.ஈயுடன் அவர்களுக்கு உள்ள தொடர்பு காவல்துறையினரோடு அவர்களுக்கு மேலும் பிரச்சினைகளை தோற்றுவித்து விடலாம் என அவர்கள் கவலைப்படுகிறார்கள்.நான் அறிந்த ஒரு சம்பவத்தில் சம்பவம் நடந்த இடத்துக்கு காவல்துறையினர் விரைந்து வந்தபோதுகூட தாக்குதலுக்கு உள்ளானவர் புகார் கொடுக்க மறுத்துவிட்டார்.கண்ணுக்குத் தெரியும்படியாக அவரது உடலில் உள்ள காயங்களைப்பற்றி காவல்துறையினர் கேட்டபோது தான் கீழே விழுந்து காயங்கள் உண்டானதாக பாதிக்கப்பட்டவர் தெரிவித்தார். பரிதியின் விடயத்தில்கூட காவல்துறையினர் வைத்தியசாலைக்குச் சென்று படுத்த படுக்கையாய் கிடக்கும் பரிதியிடம் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளனர்.

பரிதிமீது பரீசில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலும் இருபகுதியினராலும் வித்தியாசமாகச் சித்தரித்துக் காட்டப்பட்டு வருகிறது.பிரான்சின் எல்.ரீ.ரீ.ஈ தலைவர் மற்றொரு எல்.ரீ.ரீ.ஈ பிரிவினரால் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார் என்பதை பகிரங்கமாக ஏற்றுக்கொள்ள இயலாதிருப்பதனால்,பிரான்சில் புலிகளின் ஊதுகுழலான ஈழமுரசு பத்திரிகையில் ஸ்ரீலங்கா புலனாய்வுப் பிரிவினர் இத் தாக்குதலின் பின்னால் உள்ளதாக செய்தி வெளியிடப் பட்டிருந்தது. மறுபக்கத்தில் வினாயகம் பிரிவினர் பரிதிமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சொந்தக் காழ்ப்புணர்ச்சி காரணமாக சிலபேரினால் நடத்தப்பட்டதாகவும் அது அத்தனை தீவிரமான விடயம் இல்லை என்றும் கூறிவருகின்றனர்.

சோகமான நகைச்சுவை

உண்மையில் மேற்கத்தைய நகரங்களில் அரங்கேறி வரும் இந்த புலிகள் எதிர் புலிகள் மோதலானது காண்பதற்கு ஒரு சோகமான நகைச்சுவை நிகழ்ச்சியாகவே உள்ளது ஏனெனில் இரண்டு குழுக்களாலும் வழிநடத்தப்படு;ம் ஆட்கள் 2009 மே யில் புலிகளின் வீழ்ச்சி ஏற்பட்டு புலம்பெயர் சமூகத்திலுள்ள எல்.ரீ.ரீ.ஈயினரது செயற்பாடுகளின்மீதான முகக்கவனம் மிகவும் பிரகாசமான ஒளிவெள்ளமாக பாய்ச்சப்படும் வரை வெளியுலகம் அறியாதவர்களாகவே இருந்துள்ளனர்.வெளிநாட்டு புலிகளின் கட்டுப்பாட்டை அடைவதற்கு வேண்டி தம்முள் அடித்துக் கொள்ளும் இந்த நெடியவன் மற்றும் வினாயகம் என்றழைக்கப்படும் இவர்கள் யார்?

35 வயதான பேரின்பநாயகம் சிவபரன்  வலிகாமம் மேற்கைச் சேர்ந்தவர். அவர் உயரமான மனிதர் என்பதன் அடைமொழியான நெடியவன் எனும் இயக்கப் பெயரைக் கொண்டிருந்தார். நெடியவன் தனக்கு 18 வயதானபோதே எல்.ரீ.ரீ.ஈ யில் இணைந்து கொண்டார்.இவர் தனது மேற்படிப்பைத் தொடர்வதற்காக எல்.ரீ.ரீ.ஈ யினால் ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டு அங்கு அவர் அரசியல் விஞ்ஞானத்தில் தனது கற்கையை மேற்கொண்டார்.ஆனால் சிவபரன் மொஸ்கோவில் தனது  பட்டப்படிப்பை பூர்த்தி செய்யவில்லை.

சுவராஸ்யமான விடயமாக ரஷ்யாவில் நெடியவனின் படிப்புக்கான செலவு முழுவதும் கேபி யினாலேயே கையாளப்பட்டது,அவரும் இந்த இளைஞர்மீது தனிப்பட்ட கவனத்தைச் செலுத்தி வந்தார்.வெளிநாட்டு நிருவாகம்,நிதி சேகரிப்பு,மற்றும் கொள்வனவு என்பனவற்றுக்கு பொறுப்பாகவிருந்த கேபி. பிரான்சிலிருந்த ஒருவரை நெடியவனுக்கு ஒழுங்காகப் பணம் அனுப்புவதற்காக ஏற்பாடு செய்திருந்தார்.வஞ்சனையாக அதே பழைய நெடியவன்தான் பின்னாளில் கேபிக்கு எதிராகத் திரும்பினார்.

நெடியவன் எல்.ரீ.ரீ.ஈயின் அரசியல் பிரிவில் பணியாற்றி, 2002 – 2003 காலப்பகுதியில் எஸ்பி.தமிழ்செல்வனுடன் சில சுற்று  அமைதிப் பேச்சுக்களுக்காக உடன் சென்றார்.பின்பு அவர் கஸ்ட்ரோ எனப்படும் வீரகத்தி மணிவண்ணனின் கீழுள்ள வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ நிருவாகத்துக்கு மாற்றப்பட்டார். நெடியவன்  கஸ்ட்ரோவின் பொதுசனத் தொடர்புப் பிரிவுக்கு பொறுப்பாகவிருநது சமாதான நடவடிக்கை காலத்தின்போது வன்னிக்கு விஜயம் செய்த அநேக வெளிநாட்டு செயற்பாட்டாளர்களுடன் உள்ளகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார்.

இந்தச் சந்தர்ப்பத்தில்தான் நெடியவன் என்கிற சிவபரன் தனது எதிர்கால மனைவியான சிவகௌரி சாந்தமோகனைச் சந்தித்தார். சிவகௌரி ஒரு நோர்வே பிரஜை.அவரது தந்தையின் சகோதரர்தான் எல்.ரீ.ரீ.ஈ யில் அனுபவம் மிக்க ஒரு அங்கத்தவரும் பிரபாகரனின் நம்பிக்கைக்கு பாத்திரமானவருமான ரஞ்சன் லாலா என்கிற ஞானேந்திரமோகன். ரஞ்சன் லாலா யாழ்ப்பாணத்தில் ஒரு உந்து வண்டியில் பயணம் செய்யும்போது இராணுவத்தினரால் சுடப்பட்டு இறந்தார்.

சமாதான நடவடிக்கை காலத்தின்போது புலி ஆதரவாளர்களாகிய பல திருமணமாகாத இளம் பெண்கள் வன்னிக்கு விஜயம் செய்தபோது இளம் தமிழ் புலிப்போராளி ஆண்களுடன் தொடர்புகள் ஏற்பட்ட சமயத்தில் மன்மதனின் ஐந்து வகை மலர்க்கணைகளின் தாக்கத்தால் உண்டான காதல் மயக்கத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள முடியாதவர்களாயினர். சிவபரனும் சிவகௌரியும் காதல் வசமாயினர். ரஞ்சன் லாலாமீது அளவற்ற பற்றுக் கொண்டிருந்த பிரபாகரன் இந்த இணைப்புக்கு ஆதரவு நல்கினார்.

நோர்வே

இருவரும் திருமணம் செய்துகொண்டனர். 2006 ல் சிவபரன் நோர்வே சென்றார்.இந்த வருடங்களில் எல்.ரீ.ரீ.ஈ அநேகமான செயற்பாட்டாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தது. எல்.ரீ.ரீ.ஈ யின் வௌ;வேறு பிரிவுகளைச் சேர்ந்த இந்த செயற்பாட்டாளர்கள் அந்தப் புதிய நாடுகளில் புலிச் செயற்பாட்டாளர்களாக செயற்பட ஆரம்பித்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் அரசியல் மற்றும் புலனாய்வுப் பிரிவுகளைச் சோந்தவர்கள்.நெடியவன் நோர்வேயில் வதிவிடத்தை அமைத்துக் கொண்டார்.சிவகௌரியுடன் ஏற்படுத்திக் கொண்ட திருமணக் கூட்டு எல்.ரீ.ரீ.ஈ யுடன் இருந்த நெடியவனின் பிணைப்பை மேலும் உறுதியாக்கியது.வெளிநாட்டு செயற்பாட்டாளர்களுடன் தொடர்பாடல்களை ஏற்படுத்துவதற்காக கஸ்ட்ரோ நெடியவனைப் பயன்படுத்திக் கொண்டார்.

யுத்தம் விரிவடைந்தபோது வன்னிக்கும் மற்றும் வெளிநாட்டிலுள்ள புலி அங்கத்தவர்களுக்கும் இடையேயான தொடர்புகள் நலிவடையத் தொடங்கின.எனவே கஸ்ட்ரோ தனக்குப் பதிலாக ஒரு சர்வதேசப் பிரதிநிதியை நியமனம் செய்தார்.இந்த நபர் வெளிநாட்டிலுள்ள சகல எல்.ரீ.ரீ.ஈ கிளைகளினதும் ஒட்டு மொத்த பொறுப்பாளியாக இருந்தார்.அது நெடியவனைத் தவிர வேறு யாருமில்லை.

ஒரு சமயம் வெளிநாட்டிலுள்ள சகல எல்.ரீ.ரீ.ஈ  கிளைக்கும் பொறுப்பாகவிருந்த  கேபி என்கிற செல்வராசா பத்மநாதன் எல்.ரீ.ரீ.ஈயுடன் திரும்ப இணைந்து கொண்டதும் ஜனவரி 2009ல்  சர்வதேச தொடர்புகளுக்கான தலைவராக நியமிக்கப் பட்டார்.பிரபாகரனின் அனுமதியோடு கேபி இந்த நிலையை பயன்படுத்தி வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈமீதான தனது கட்டுப்பாட்டை மீளமைக்க முயன்றார்.இது கஸ்ட்ரோவை சினமடைய வைத்தது.கஸ்ட்ரோவின் அதிகாரத்தைக் கொண்ட நெடியவன், கேபி இந்த உலகப் புலித் தலைவராக முயற்சிப்பதை தடைசெய்ய முயன்றார்.

மே 2009ல் எல்.ரீ.ரீ.ஈ தலைமை அழிக்கப்பட்ட பின்னரும் இந்த எதிர்ப்பு தொடரலாயிற்று தனது சேவைமூப்பை கணக்காகக் கொண்டு கேபி தலைமைப்பதவியை கைப்பற்ற முயற்சித்த பொழுது நெடியவனும் அவரது விசுவாசிகளும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். பலத்த வாதப்பிரதிவாதங்களுக்குப் பின்னர் இறுதியில் சமரசம் எற்படுத்தப்பட்டு கேபி மீள்கட்டமைக்கப்பட்ட எல்.ரீ.ரீ.ஈயின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.நெடியவன் வெளிநாட்டுக் கிளைகளின் நிருவாகத்தராக பொறுப்பேற்றார்.

கேபி மலேசியாவில் கைது செய்யப்பட்டு ஸ்ரீலங்காவுக்கு நாடுகடத்தப்பட்ட பின்னர் வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ கட்டமைப்புகள் மீதான தனது அதிகாரத்தை நெடியவன் மீண்டும் உறுதி செய்த கொண்டார். ஆனால் விரைவிலேயே அங்கு ஒரு புதிய போட்டியாளர் தோன்றினார்.அது வினாயகம் என்றழைக்கப்படுகிற சேகரப்பிள்ளை வினாயகமூர்த்தி என்கிற எல்.ரீ.ரீ.ஈ புலனாய்வுப் பிரிவின் ஒரு சிரேட்ட அங்கத்தவர்.

தென்மராட்சி

47 வயதான வினாயகம் என்றழைக்கப்படுகிற சேகரப்பிள்ளை வினாயகமூர்த்தி 1964 நவம்பர் 10 ந்திகதி பிறந்தார். அவரது குடும்பம் தென்மராட்சியின் வரணிப்பகுதியிலுள்ள இடைக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தது.எவ்வாறாயினும் அவரது குடும்பம் சாவகச்சேரியில் சில வருடங்களாக வசித்து வந்தது.

வினாயகமூர்த்தி தனது 20வது வயதில்1985ம் ஆண்டு முறைப்படி எல்.ரீ.ரீ.ஈயில் இணைந்தார்.அதற்கு முன் அவர் ஒரு பாடசாலை மாணவராக இருந்தபோது ஒரு எல்.ரீ.ரீ.ஈ உதவியாளராக இருந்திருக்கிறார்.அவர் யாழ் குடாநாட்டின் தெற்கு மற்றும் தென்மேற்கு பகுதியிலுள்ள சொர்ணப்பற்று-மாசார் பகுதியிலும் மற்றும் புலோப்பளை – கிளாலிப் பகுதியிலும் உள்ளுர் இராணுவப் பயிற்சியினைப் பெற்றிருந்தார்

வினாயகம் ஆரம்பத்தில், லொஸ் ஏஞ்சல்ஸ் என்று புலிகளின் சுற்றாடலில் அழைக்கப்பட்ட தென்மராட்சிப் பகுதியில் நிலை கெண்டிருந்தார்.கேடில்ஸ் அல்லது திலீபன் என்பவர்தான் அச்சமயம் தென்மராட்சிக்கு பொறுப்பாகவிருந்தார். வினாயகம், எல்.ரீ.ரீ.ஈயின் புலனாய்வுப் பிரிவான பொட்டு அம்மான் தலைமையிலான ‘புலிகள் அமைப்பின் பாதுகாப்பு புலனாய்வுச் சேவைகள்’(ரி.ஓ.எஸ்.ஐ.எஸ்) பகுதியால் உள்வாங்கப்பட்டார். இப்பகுதி பின்னர் தேசிய புலனாய்வுப் பிரிவு என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. வினாயகம் இரண்டாவது லெப்ரினனாக பதவி உயர்த்தப் பட்டதுடன் இயன்னா எனும் புதிய இயக்கப் பெயரையும் பெற்றார்.வினாயகமூர்த்தி அல்லது இயன்னா 1990 – 93 காலப்பகுதிகளில் பொட்டு அம்மானின் நேரடிப் பொறுப்பின் கீழ் பணியாற்றினார்.

1994 ல் வினாயகமூர்த்தி லெப்ரினன் ஆகப் பதவி உயர்த்தப்பட்டு வவுனியா மாவட்ட புலனாய்வுப் பிரிவின் தலைவராக வவுனியாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.பின்னர் அவர் கப்டன் ஆகத் தரமுயர்த்தப்பட்டு,புதிய கடமைகளை ஏற்று பாரிய கொழும்பு பிரதேசத்துக்கு அனுப்பப்பட்டார்.அவர் நீர்கொழும்பு பகுதியில் நிலை கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அவர் நீர்கொழும்பில் தங்கியிருந்த வேளையில்தான் அவரது முதலாவது  இலக்கு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின்மீது 2001 ஜூலை 12ந் திகதி எல்.ரீ.ரீ.ஈயினர் மேற்கொண்ட தாக்குதலுக்கான அடித்தள வேலைகள் யாவற்றையும் பூர்த்தியாக்கும் பாத்திரத்தை இவரே ஏற்றிருந்தார். இந்தப் பணியின் வெற்றிகரமான பெறுபேற்றின் பின்னர், வினாயகத்துக்கு மேஜர் எனும் பதவி உயர்வு பரிசாக வழங்கப்பட்டு வன்னிக்குத் திரும்ப அழைக்கப்பட்டார்.

ஓஸ்லோவின் உதவியுடன் 2002 யுத்த நிறுத்தம் ஏற்பட்டதின் பின்னர், எல்.ரீ.ரீ.ஈயின் புலனாய்வுப் பகுதி வன்னிக்கு வெளியே ஸ்ரீலங்காவின் பல்வேறு பகுதிகளிலும் பணியாற்றும் செயற்பாட்டாளர்களின் விடயங்களையும் அதேபோல வெளிநாடுகளிலுள்ளவர்களின் செயற்பாடுகளிலும் அக்கறை செலுத்துவதற்காக ஒரு விசேட வெளிநாட்டு விடயப் பிரிவு உருவாக்கப்பட்டது.இந்த விசேட புலனாய்வுப் பிரிவு “வெளியக மற்றும் உள்ளக விவகாரங்களுக்கான புலனாய்வுப் பிரிவு” என அழைக்கப்பட்டது.

புலம்பெயர் பகுதியினர்

வினாயகமூர்த்தி இந்த விசேட புலனாய்வுப் பிரிவுக்கு 2002ல் தலைவராக நியமிக்கப்பட்டார்.ஒரு கட்டத்தில் அவர் இந்தியாவுக்கு ஒரு போலிக்கடவுச்சீட்டின் மூலம் பயணம் செய்து அங்கு ஒரு ஆதரவு வலையமைப்பை உருவாக்குவதற்காக அங்கு தங்கியிருந்தார்.சமாதானப் பேச்சுக்களுக்காக ஐரோப்பா சென்ற எல்.ரீ.ரீ.ஈ தூதுக்குழுவினருடன் ஒரு  போலிக்கடவுச்சீட்டின் உதவியுடன் இவரும் கூடச்சென்று பல ஐரோப்பிய நாடுகளுக்கும் பயணம் செய்து புலம்பெயர் சமூகத்தினருடன் சத்தமில்லாமல் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார்.

யுத்தம் மீண்டும் வெடித்தது மற்றும் இராணுவத்தினர் மெல்ல மெல்ல முன்னேறத் தொடங்கினார்கள்.2009 ஜனவரி 2ல் ஏற்பட்ட கிளிநொச்சியின் வீழ்ச்சி எல்.ரீ.ரீ.ஈ வட்டத்தில் எச்சரிக்கை மணியை ஓங்கி ஒலிக்க வைத்தது.வரப்போகும் தோல்வியை தடுத்து நிறுத்துவதற்கான அவசர நடவடிக்கைகளில் எல்.ரீ.ரீ.ஈ ஈடுபட ஆரம்பித்தது.

அவ்வாறான ஒரு நகர்வுதான் கரும்புலி தற்கொலைப்படை அணியொன்றை தென்பகுதியில் செயற்பட வைத்து வன்முறை மற்றும் அழிவுகளை ஏற்படுத்தலாம் என்பது.இந்தக் குழுவுக்குத் தலைமை தாங்கியது வேறுயாருமல்ல இப்பொழுது லெப்.கேணல் தரத்துக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ள வினாயகமூர்;த்தியேதான்.

வினாயகம் தானே தற்கொலைத் தாக்குதலில் ஈடுபடவேண்டும் என்று எதிhபார்க்கப் படவில்லை.தற்கொலைத் தாக்குதல்களை திட்டமிட்டு, ஒருங்கிணைத்து,மேற்பார்வை செய்யும்படி அவரிடமிருந்து எதிர்பார்க்கப்பட்டது. எல்.ரீ.ரீ.ஈயின் தலைமைப்பீடம் மிகப் பெரியதொரு வெடியொலியை எதிர்பார்த்துக் காத்திருந்த போதிலும்,அவ்வாறான எந்த ஒரு நிகழ்வும் நடைபெறவில்லை. சாதாரணமாக எதிர்பாhத்தபடி வினாயகத்தினால் எதனையும் நிறைவேற்ற முடியவில்லை.இந்த முழு நடவடிக்கையும் எதிர்பார்த்ததுபோல நடக்காமல் வெடிக்காத வெறும் புஸ்வாணம் போலாகிவிட்டது.

ஆயுதப் படைகள் எல்.ரீ.ரீ.ஈ நிலைகளை நெருங்கி வந்து கொண்டிருந்த சமயம் தொடர்ந்து வெளியே தங்கியிருந்த வினாயகத்துக்கு இந்தத் தோல்வியும் மற்றொரு அர்த்தத்தில் ஆசீர்வதிக்கப்பட்ட வரப்பிரசாதமாகவே அமைந்தது.உண்மையில் தான் தென்பகுதியில் ஒரு பாரிய தாக்குதலை நடத்துவதற்கு முயற்சிகளைச் செய்தபோதிலும் பாதுகாப்பு மிகத் தீவிரமாகப் பலப்படுத்தப் பட்டிருப்பதனால் அது மிகவும் கடினமாக உள்ளதாக வினாயகத்தினால் தனது தோல்விக்கு ஒரு சமாதானம் சொல்ல முடிந்தது.

இந்த நிலமை எல்.ரீ.ரீ.ஈ உயர்மட்டத்தால் வினாயகம் மீது கொண்டிருந்த நலன்களுக்கு தீங்கினை விளைவித்திருந்தாலும் வினாயகத்தைப் பொறுத்தவரை அது நன்மையளிப்பதாகவே இருந்தது. எல்.ரீ.ரீ.ஈ யினர் தமது கடைசி நிலையான முல்லைத்தீவு மாவட்டத்தின் காரைத்துறைப்பற்று உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட பகுதிக்குள் முற்றுகையிடப்பட்டிருந்தபோது, வினாயகம் வன்னிக்கு வெளியே ஒப்பீட்டளவில் பாதுகாப்பான ஓரிடத்தில் இருந்தார்.இதன்படி எல்.ரீ.ரீ.ஈயின் ஏனைய மூத்த தலைவர்கள் முள்ளிவாய்க்கால் தோல்வியில் நசுக்கப்பட்டதைப்போல வினாயகம் அழிக்கப்படவில்லை. உண்மையில் எல்.ரீ.ரீ.ஈயினரின் தோல்விக்கு சிறிது முன்னராகவே அவர் இந்தியாவுக்கு பயணமாகி விட்டார்.

புகலிடம்

அதன்பின்னர் வினாயகம் இந்தியாவை விட்டு ஒரு தென்கிழக்கு ஆசிய நாட்டுக்கு பயணமானார்.பிரித்தானியாவில் உள்ள தனது உறவினர்களின் உதவியுடன் தயார் செய்யப்பட்ட ஒரு போலிக் கடவுச்சீட்டின் உதவியுடன் அங்கிருந்து லண்டனுக்குப் பறந்தார்.இது 2009ம் ஆண்டு ஒக்டோபர் -  நவம்பர் மாதங்களில் நடைபெற்றது.பிரிட்டனில் சுருக்கமான ஒரு சொற்பகால வாசத்தை முடித்துக்கொண்டு வினாயகம் கண்டத்தின் பிரதான நிலப்பரப்புக்குள் கடந்து வந்து பரீசில் அரசியல் புகலிடம் கோரினார். அவர் இப்போது பிரான்சுக்கும் மற்றும் ஜேர்மனிக்கும் இடையே பறந்து திரிவதாக கூறப்படுகிறது.

வினாயகம் ஐரோப்பாவில் உள்ள புலிகளின் பல்வேறு வெளிநாட்டுப் புலனாய்வுப் பிரிவினது செயற்பாட்டாளர்களையும் ஒன்று திரட்டி அவர்களை ஒரு நெருக்கமான பின்னலான பிரிவாக வடிவமைத்து அதன் ஏக பொறுப்பாளராக தன்னை திடமாக்கிக் கொண்டார்.ஒரு குறுகிய காலப்பகுதியில் நெடியவனுக்கும் வினாயகத்துக்கும் இடையில் ஒரு பணி தொடர்பான உறவு நீடித்தது.மற்றும் இருவரும் மூலோபாயமுள்ள ஒரு கூட்டு பங்காளி முறைக்குள் உள்நுழைந்தனர்.

எப்படியாயினும் இது வெகுகாலத்துக்கு நீடித்து நிற்கவில்லை,விரைவிலேயே ஒருவருக்கொருவர் தம்முள் முட்டி மோதிக் கொண்டனர்.வினாயகம் பலம்பெற விரும்பிய அதேவேளை நெடியவனுக்கு தனது அதிகாரத்தை கைவிட விருப்பமிருக்கவில்லை.இந்த அதிகாரப் போராட்டத்தின் மையப்பகுதியாக இருந்தது பணம் என்ற ஒன்றுதான்.நெடியவன் – வினாயகம் மோதல் இப்போது பகிரங்கமாக வெளியே சிந்தப்பட்டு மேற்கிலுள்ள புலம்பெயர் சமூகத்தினரிடையே போராடப்பட்டு வருகிறது.இருபகுதியினரும் தமது பலத்தை வெளிக்காட்டும் களப் பரீட்சைக்காக மேற்கில் பல நகரங்களிலும் கொண்டாடப்பட்டு வரும் மாவீரர் நாளான நவம்பர் 27 இனை தெரிவு செய்து தம்மை தயார்படுத்தி வருகின்றனர்.

தமிழில்: எஸ்.குமார்

- டி.பி.எஸ்.ஜெயராஜ்

நன்றி:  தேனி.காம்